×

விவசாய பம்பு செட்டுகளுக்கு மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்படும் : திருப்பூரில் முதல்வர் பழனிசாமி வாக்குறுதி

உடுமலை :விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று திருப்பூர் மாவட்டம் உடுமலையில் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி இன்று உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகே திறந்த வேனில் பிரசாரம் செய்தார்.அப்போது அவர் பேசியதாவது: அதிமுக.ஆட்சியில் உடுமலையில் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. மக்களை பற்றி சிந்திக்கும் ஆட்சிதான் அதிமுக ஆட்சி. பொதுமக்கள் குறைகளை தெரிவிப்பதற்காக 1100 என்ற பிரத்யேக எண் இன்னும் 10 நாட்களில் தொடங்கப்பட உள்ளது. இந்த இலவச எண்ணில் தொடர்புகொண்டு பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம். இதன்மூலம் குடிநீர், மின்சாரம், வீட்டுமனை உள்ளிட்ட அனைத்து குறைகளையும் தெரிவிக்கலாம்.

உடுமலையை தலைமையிடமாக கொண்டு கல்வி மாவட்டம் அமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்த அரசு செய்து வருகிறது. இதன்மூலம் 100 மெட்ரிக் டன் உணவு தானியம் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது.உடுமலை அருகே ரூ.250 கோடி செலவில் கால்நடை ஆராய்ச்சி நிலையம் மற்றும் கல்லூரி அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்றுவருகிறது. இது செயல்பாட்டுக்கு வந்ததும், உடுமலை சுற்றுவட்டார பகுதி மாணவர்களுக்கும், விவசாயிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். ரூ.1418 கோடியில் குடிமராமத்து பணிகள் நிறைவடைந்துள்ளது. இதன்மூலம் குளம், குட்டைகள் தூர்வாரப்பட்டுள்ளன. விவசாயிகள் பம்பு செட்டுக்கு மும்முனை மின்சாரம் 24 மணிநேரமும் வழங்கப்படும். தாழ்த்தப்பட்ட மக்கள், ஏழை தொழிலாளர்களுக்கு கான்க்ரீட் வீடு கட்டித் தரப்படும்.  இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Tags : Palanisamy ,Tirupur , முதல்வர் பழனிசாமி
× RELATED போலி ஆதார்: திருப்பூரில் 3 வங்கதேச இளைஞர்கள் கைது